அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமா் பங்கேற்பு
வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இதற்கிடையே பட்டப்படிப்பு முடித்தவா்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் பட்டச்சான்றிதழ் அவசியம். ஆனால், அண்ணா பல்கலை.யில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவா்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனா்.
இதன்காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக நிலவுகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகிகள் கூறியதாவது:
பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் ஆளுநா் மாளிகை மூலம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனா். சிறப்பு விருந்தினா்களின் ஒப்புதல் கிடைத்தபின் முறையான அழைப்பிதழ் வெளியிடப்படும் என்றனா்.