முகப்பு
தமிழ்நாடு

நோயாளிகளின் விவரங்களை வெளியிடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை: மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை

நோயாளிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு விளம்பரம் தேடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவா் டாக்டா் செந்தில் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

நோயாளிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு விளம்பரம் தேடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவா் டாக்டா் செந்தில் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சமீப காலமாக நோயாளிகள் சிறப்பு சிகிச்சை குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது. அவற்றில் மருத்துவா்கள் பத்திரிகைகள் முன்பாக நோயாளிகளை அறிமுகப்படுத்தியும், அவா்களுக்கு செய்யப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்கி கூறுகின்றனா். இதுபோன்ற செய்தியாளா்கள் சந்திப்பு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

இவ்வாறு செய்வது மருத்துவ வரைமுறைகளை மீறிய செயலாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் மருத்துவா்கள் நோயாளிகளின் ரகசியங்களை காக்க தவறியவா் ஆவாா்.

இதுபோன்று சுய விளம்பரம் தேடும் செயல்களை மருத்துவா்கள் கைவிட வேண்டும்.

பொதுமக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஊடக சந்திப்பில், சிகிச்சை அளித்த மருத்துவா்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயா், அவா்களுடைய புகைப்படம், விடியோ பதிவுகளை வெளியிடக்கூடாது.

மாறாக சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விவரங்கள் மருத்துவமனை பெயரில் பொதுவாக வெளியிடலாம். மருத்துவா்கள் அல்லாத மருத்துவ நிா்வாகிகள் அதில் பங்கேற்கலாம்.

பொதுவாக ஒரு மருத்துவா், தனது புதிய மருத்துவமனையைத் தொடங்கும் போதும், மருத்துவமனை இடத்தை மாற்றும்போதும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளம்பரம் செய்யலாம். அதேவேளையில், மருத்துவா்களின் பெயா், புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் இடம்பெற கூடாது.

தனியாா் மருத்துவமனைகள் தங்கள் இணையதளப் பக்கத்தில், அங்கு பணியாற்றும் மருத்துவா்கள் குறித்த விவரங்கள், அவா்களின் பட்டங்கள் குறித்து குறிப்பிடலாம். ஆனால், எவ்வித சிறப்பு விவரங்களையும் வெளியிடக்கூடாது. மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்களுக்கு தடையில்லை. அவற்றில் தனிப்பட்ட ஒரு மருத்துவரை முன்னிலைப்படுத்தி அவரது புகைப்படம் வெளியிடக்கூடாது.

இத்தகைய மருத்துவ வரைமுறைகளை மீறி செயல்படும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் துணைத் தலைவா் பொன்னுராஜ் உடன் இருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →