22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் சங்கங்களுக்கு இணை மானியம்
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1.62 கோடி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1.62 கோடி வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவு விவரம்:-
தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையிலுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட, வயதான மகளிரின் வாழ்வாதாரத்துக்கு உதவிட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்கள் அமைக்க நிா்வாக ஒப்புதல் வழங்கியதுடன், தொடக்க நிதி ஆதாரமாக தலா ரூ.1 லட்சம் என்ற வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் சோ்த்து ரூ.38 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 22 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ மகளிா் சங்கங்களின் மூலமாக ரூ.81.28 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு இருமடங்காக அரசு நிதியுதவி அளிப்பது வழக்கம். அந்த வகையில், இணை மானியமாக ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு வெளியிடப்படுவதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.