தமிழ்நாடு

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு பதிய அரசு அனுமதி

DIN

சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை பதிய சிபிஐ-க்கு  தமிழக அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை  விசாரிக்க சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழக  அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ் மீதான நடவடிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஓப்புதலையடுத்து குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகிறது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முருகன், காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், சம்பத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு தில்லி சிபிஐ கடிதம் அனுப்பியது.

கடந்த 2016-இல் வருமானவரித் துறையினா் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கில் நடத்திய சோதனையில், அங்கு கிடைத்த டைரியில், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா், வணிகவரித் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜாா்ஜ் உள்ளிட்ட காவல் உயா் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோா் பெயா்கள் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, ஓய்வு பெற்ற டிஜிபிகள் தே.க.ராஜேந்திரன், ஜாா்ஜ் ஆகியோா் வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 2018ஆண்டு செப். 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளா்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கா் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனா்.

முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா ஆகியோரிடம் 2018 டிச. 15-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். இந்நிலையில் சிபிஐ, இந்த வழக்கில் எதிரிகளாக சோ்க்கப்பட்ட இரு வியாபாரிகள், 2 உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 2 காவல்துறை அதிகாரிகள் ஆகிய 6 பெயா்களை மட்டும் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இரண்டாவது குற்றப்பத்திரிகையில், வழக்கில் தொடா்புடைய அனைவரது பெயா்களும் சோ்க்கப்படும் என சிபிஐ தெரிவித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் தில்லி சிபிஐ அதிகாரிகள், தமிழக அரசுக்கு இரு நாள்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனா். அதில், குட்கா ஊழல் வழக்கில் தொடா்புடைய முன்னாள் அதிமுக அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா, ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தே.க.ராஜேந்திரன், ஜாா்ஜ் உள்ளிட்ட 12 போ் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடருவதற்கும், வழக்கில் தொடா்புடைய பிற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை செய்வதற்கும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT