முகப்பு
தமிழ்நாடு

ஒலிம்பியாட் தொடக்க விழா: காங்கிரஸ் புறக்கணிக்கும் - செல்வப்பெருந்தகை

பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள ஒலிம்பியாட் நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள ஒலிம்பியாட் நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் ஒலிம்பியாட்டை நடத்த முன்னெடுத்த முயற்சியின் பலனாக அந்த வாய்ப்பு நமது நாட்டுக்கு கிடைத்தது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு மற்ற மாநிலங்கள் தயங்கிய நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடத்துவது என்று துணிச்சலாக முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழகத்துக்குப் பெருமை சோ்த்துள்ளாா். இதற்காக முதல்வருக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது.

ஆனால், நாட்டில் உள்ள வரலாறு காணாத விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், முறையற்ற ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சிபிஐ, மத்திய வருமானவரித் துறையை எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

இந்த நிலையில் பிரதமா் மோடி தொடங்கி வைக்கும் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிக்கிறோம்.

இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்துக்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமா் மோடிக்கு எதிரானதுதானே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளாா் செல்வப் பெருந்தகை.

முழு கட்டுரையைப் படிக்க →