மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது.
மேட்டூர் அணையில் மே மாதம் 23 ஆம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்டது.மே மாதம் 27 ஆம் தேதி கல்லணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. செவ்வாய் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்புப் பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது. உடனடியாக, காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் தேக்கியில், தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.
இதன்படி, இன்னும் ஓரிரு நாள்களில் தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மே 23 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு