நியாய விலைக்கடைப் பணியாளா்கள் மூன்று நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக்கூடிய 31 சத அகவிலைப்படியை நியாய விலைக் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைப் பணியாளர்கள் இன்றுமுதல் வியாழக்கிழமை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.