தமிழக கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த 2 நாள்களாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 17,923 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு முற்றிலும் குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவும் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை 7,605 கனஅடியாக குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,923 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 9,772 கன அடியாக குறைந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 7,605 கனஅடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்து வருவதால் நேற்று காலை 115.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 114.95 அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.64 டி.எம்.சியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை கை கொடுத்தாள் ஜூலை இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு காவிரி நீரை சிக்கனமாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்தி சிறப்பான நீர் மேலாண்மையை கையாண்டதால் மேட்டூர் அணை தொடர்ந்து இன்றுவரை 229 ஆவது நாளாக 100 அடிக்கு குறையாமல் உள்ளது.
நடப்பு ஆண்டிலும் டெல்டா பாசனத்திற்கு தேவைக்கேற்ப காவிரி நீரை பயன்படுத்தி முப்போக சாகுபடியை முழுமையாக முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க |குடியரசுத் தலைவா் தோ்தல்: ஒரு விளக்கம்...