திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து சண்முகர், வள்ளி தெய்வானையை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்காண விசாகத் திருவிழா, கடந்த 3 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்துக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். அங்கு வசந்த மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
வசந்த மண்டபத்தில் அருள்மிகு சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய விழாவான வைகாசி விசாகத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 4.30 மணியளவில் மணிக்கு சண்முகர் சன்னதியில் அருள்மிகு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பால் கொண்டு சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர். மேலும் பலர் பறவை காவடி எடுத்துவந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர்.
விழாவினையொட்டி கோயிலில் பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோயில்வாசல், 16 கால்மண்டபம், திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதிகளில் உயர் மின் கோபுரம் அமைத்தும், சன்னதி தெரு, பெரியரத வீதி மற்றும் கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் கேமிராக்கள் பொருத்தியும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆனையர் நா.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.