முயலை வேட்டையாடும் பயிற்சி புலி: விடியோ வெளியிட்ட வனத் துறை
கோவை மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் விடியோவை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் விடியோவை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்து முடி பகுதியில் 8 மாத குட்டிப் புலி ஒன்று, வனத் துறையினரால் மீட்கப்பட்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த குட்டிப் புலி நல்ல நிலையில் அது உள்ளது.
தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தனி கூண்டு அமைத்து 9 மாதங்களாக வனத் துறையினர் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் அதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் கூறினர். தற்போது அப்பகுதியில் ஓடுகின்ற முயலை வாயில் கவ்வி கொண்டு செல்லும் விடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு இன்னும் பல மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனஅதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.