'அண்ணன் எடப்பாடியார்.. ' விண்ணை முட்டும் முழக்கத்துடன் பழனிசாமிக்கு வரவேற்பு
அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.
சென்னை: அண்ணன் எடப்பாடியார் வாழ்க என்ற முழக்கத்துடன், அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை 8 மணிக்கு சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்திலிருந்து புறப்பட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபம் அமைந்திருக்கும் வானகரம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 11.15 மணிக்குத்தான் மண்டபத்துக்கு வருகை தந்தார்.
எடப்பாடி பழனிசாமி வந்த வாகனத்துக்கு அதிமுக தொண்டர்கள் மலர்களைத் தூவியும் அண்ணன் எடப்பாடியார் வாழ்க என விண்ணை முட்டும் வாழ்த்துக் கோஷங்களுடன் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர். தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன், பொதுக்குழு மண்டபத்துக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருந்த அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
முன்னதாக, அதிமுக பொதுக் குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவர் உள்ளே வரும் போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் பலரும் கோஷம் எழுப்பிய நிலையில், அவர் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த போது, வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், ஓ. பன்னீர்செல்வத்தை வெளியே போகச் சொல்லியும் சில அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.