சென்னையில் சசிகலா வீட்டின் முன் திரண்டுள்ள அதிமுகவினர் அதிமுகவை வழி நடத்த சசிகலா வரவேண்டும் என கோஷமிட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திடீர் திடீரென எழுந்த போஸ்டர் யுத்தம் நடைபெற்று வந்தது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே எழுத்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் தலைத்தூக்கியது. இது இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலும் வெடித்தது. தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், அடுத்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டு வந்தனர். பின்னர், சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.
அப்போது, அவர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு, கண்டன குரல்கள், வாகனத்தை பஞ்சராக்கியது போன்ற செயல்கள் நடந்தது. இது அதிமுக தொண்டர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க | காலாவதியானால் ஓபிஎஸ்ஸுக்குதான் அதிகாரம்: வைத்திலிங்கம்
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை நாடுவது குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் சசிகலா வீட்டின் முன்பு திரண்டுள்ள அதிமுக தொண்டர்கள் சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என கைகளில் அதிமுக கொடிகளை ஏந்தியபடி கோஷமிட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.