சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் சிறை
வீட்டுக்கு வந்திருந்த சகோதரியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை: வீட்டுக்கு வந்திருந்த சகோதரியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கணக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் முருகேசன் (36). தஞ்சாவூரைச் சேர்ந்த இவரது சகோதரி தமிழரசி தனது 15 வயது மகளை பாட்டியை கவனித்துக் கொள்வதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு கணக்கன்காட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது அச்சிறுமியை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதுகுறித்து சிறுமியின் தாய் தமிழரசி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Advertisement
இதைத் தொடர்ந்து முருகேசனைக் கைது செய்த போலீஸார், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணையின் நிறைவில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர். சத்யா, திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டு, 6 மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.