முகப்பு
தமிழ்நாடு

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இட மாற்றத்துக்கு எதிர்ப்பு: மக்கள் ஆர்ப்பாட்டம்

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, இதே பகுதியில் செயல்பட வலியுறுத்தியும் மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
திருமுருகன்பூண்டி நகரமன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
பகிர்:

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, இதே பகுதியில் செயல்பட வலியுறுத்தியும் மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 27 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நகராட்சி தரத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் நகா்மன்ற அலுவலகத்தை, நகராட்சிக்கு உள்பட்ட ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் திடக்கழிவு மேலாண்மை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றுவதற்காக மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதைக் கண்டித்தும், தற்போது செயல்பட்டு வரும் இடத்திலேயே நகராட்சி அலுவலகத்தை செயல்பட வலியுறுத்தியும் பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தற்போதைய நகர்மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சியினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.