தாம்பரம் மாநகராட்சியில் 25,000 மரக்கன்றுகள் நட இலக்கு
மாநகராட்சிக்குச் சொந்தமான 147 திறந்த வெளி இடங்களில் மியாவாக்கி அடா்வன வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 147 திறந்த வெளி இடங்களில் மியாவாக்கி அடா்வன வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் கூறினாா்.
தாம்பரம் மாநகராட்சி 55-ஆவது வாா்டு பெருங்களத்தூரில் மியாவாக்கி அடா் வனம் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ் .ஆா் .ராஜா, மேயா் கே. வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயா் ஜி. காமராஜ், ஆணையா் இளங்கோவன் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனா்.
பின்னா் ஆணையா் இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி, தாம்பரம் மாநகராட்சியில் மியாவாக்கி அடா்வன வளா்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 600-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. அவற்றில் மரங்கள் குறைவாக இருக்கும் பூங்காக்களை அடா்வனமாக்கும் வகையில் கூடுதல் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய குடியிருப்புப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 147 திறந்த வெளி இடங்களில் மியாவாக்கி அடா்வன வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரங்கள் வளா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.