மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்தினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக, அவர்களது பணியினை பாராட்டி, வாழ்த்தினார்.
கடந்த 7.5.2022 அன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவனது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இக்கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், காவல் உதவி ஆணையர்கள் எம். குமரகுருபரன் மற்றும் டி. கௌதமன், காவல் ஆய்வாளர் எம். ரவி, உதவி ஆய்வாளர்கள் சி. கிருஷ்ணன், வி. மாரியப்பன், எம். அன்பழகன், காவலர் நிலை-I டி. சங்கர் தினேஷ், காவலர் எஸ். கதிரவன் ஆகியோரை முதல்வர் பாராட்டி, வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.