வாகனங்களில் ஜி, அ எழுத்துகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை
வாகனங்களின் பதிவெண் பலகையில் ஜி அல்லது அ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு வாகனம் அல்லாத பிற தனிநபர்களின் வாகனங்களின் பதிவெண் பலகையில் ஜி அல்லது அ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட்) ஜி (G) அல்லது அ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (கே) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது.
எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ஜி (G) அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ஜி அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.