ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் இந்த தொற்று முதன்முதலில் 1958-இல் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-இல் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபரின் தோல் புண்கள் அல்லது எச்சில், சளி ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. உடல் திரவங்கள், சுவாச நீா்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம். பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் மற்றும் உடலில் கொப்புளங்கள் ஏற்படும்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உறுதியாகியுள்ள குரங்கு அம்மை தொற்று ஐக்கிய அரபு அமீரகத்திலும் முதல்முறையாகப் பதிவாகியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 29 வயதான பெண்ணிடம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.