பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் பகுதியில் கனமழைக்கு அரசு தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. வெள்ளிக்கிழமை காலையும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தொடர் மழையால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், பாவூர்சத்திரம் அருகில் உள்ள அயன் குறும்பலாப்பேரியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்த சேதம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுற்றுச்சுவர் இடிந்த விழுந்த பள்ளியின் கட்டடம் பலவீனமாக இருப்பதாகவும், அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.