முகப்பு
தமிழ்நாடு

சூறாவளி காற்று: ராமேஸ்வரத்தில் 7 விசைப்படகுகள் சேதம்; மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் 7 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. 

Updated On : 5 நவம்பர், 2022 at 10:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

ராமநாதபுரம்:  ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் 7 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பயன்பாட்டில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்படும் புயல், சூறாவளி காற்று காரணமாக  ஒவ்வொரு ஆண்டும் படகுகள் சேதமடைந்து வருகின்றன.

Advertisement

இதனால், படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தும் வகையில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்துத் தர வேண்டும் என்று தொடர்ந்து மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்நிலையில் இன்று அதிகாலையில் வீசிய சூறாவளி காற்று காரணமாக ஜோஸ்வா, கென்னடி, அந்தோணிராஜ், கிருபை, இன்ரைசன், சவரிமுத்து உள்ளிட்டவர்களின் 7 விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 7 படகுகளும் சேதமடைந்தன. மேலும், நங்கூரத்துடன் கரை ஒதுங்கிய சேதமடைந்த 5 படகுகளை மீட்டனர்.

இதில் சேதமடைந்த 7 படகுகளுக்கும் குறைந்தபட்சமாக தலா ரூ. 50,000 முதல் 2 லட்சம் வரை செலவாகும் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் சகாயம் கூறுகையில், ராமேஸ்வரம் மீன் பிடி குடும்பத்தில் சுமார் 5,000 மீனவர்களுடைய வாழ்வாதாரமாக இது இருக்கிறது. மீன்பிடித் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் காலங்களில் ஏற்படும் சூறைக்காற்று காரணமாக பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசும் ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பான தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்துத் தர வேண்டும். மேலும், சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.