வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கருமாபுரம் கிராமம், தென்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவருக்கு திருமணமாகி சுபாஷினி என்ற மனைவியும், சுவாஷிஹா, பிரம்மபொக்கிஷா, இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கணித ஆசிரியரான இவர், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 ஆண்டுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த இவர், பள்ளி கழிவறை அருகே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவரை உடனடியாக ஆசிரியர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது உடலை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது ஏற்கனவே உயிரிழந்து தெரியவந்தது.
பள்ளியில் மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்களோடு, இனிமையாகப் பழகி, சிறப்பாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் பள்ளியிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் அடைந்தது, பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது சொந்த கிராமமான கருமாபுரத்தில் இளைஞர்களுடன் நெருங்கிப் பழகியதோடு, சமூக அக்கறையோடு பல்வேறு சேவைப் பணிகளை செய்து வந்த ஆசிரியர் சரவணன் திடீரென மாரடைப்பால் மறைந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் இப்பகுதி இளைஞர்கள் இடையையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.