100 நாள் பணி: முறையான வேலை கிடைக்கதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை!
மணப்பாறை அடுத்த பொம்மம்பட்டியில் 100 நாள் பணியில் ஒருதரப்பினருக்கும் மட்டும் பணி வழங்கப் பாரபட்சம் செய்து வருவதாகக் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மணப்பாறை அடுத்த பொம்மம்பட்டியில் 100 நாள் பணியில் ஒருதரப்பினருக்கும் மட்டும் பணி வழங்கப் பாரபட்சம் செய்து வருவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 நாள் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி ஊராட்சி பொம்மம்பட்டியில் 100 நாள் பணியில் தொழிலாளர்களில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்பினருக்கும் மட்டும் முறையாக பணி வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருவதாகவும், அப்படிப் பணி வழங்கினாலும் சுமார் 7 கிமீ தொலைவிற்கு மேல் உள்ள கிராமங்களில் மட்டுமே பணி வழங்குவதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஒரு தரப்பு சமுதாய மக்களிடம் பணி வழங்கப் பாரபட்சம் செய்து வருவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை அப்பகுதி தொழிலாளர்கள் மணப்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தங்களது பணி அட்டைகளை ஒப்படைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், வேங்ககைக்குறிச்சி ஊராட்சி செயலர் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் செய்து 7 தினங்களில் முறையாக பணிகள் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.