ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலி
ராணிப்பேட்டை அருகே 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அருகே 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநர் தனியார் தொழிற்சாலையில் கிரேன் இயக்கியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(32). இவருக்கு திருமணமாகி யமுனா என்ற மனைவியும் 4 வயது மற்றும் 8 மாத ஆண் குழந்தை உள்ளனர்.
இவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுநராகவும் மேலும் இரும்புத் தொழிற்சாலையில் உதிரிபாகம் ஏற்றி, இறக்கி வைக்கும் கிரேன் வாகனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலையில், இரும்பு உதிரி பாகங்களை கிரேன் மூலம் ஏற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஜெகதீஷ் உயிரிழந்தார்.
தனியார் தொழிற்சாலையில் உயிரிழந்த ஜெகதீஷ் குறித்து முறையான தகவலை அவரது குடும்பத்திற்கு தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது
இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் எதிரே ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.