சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் கணவரை தாக்கியதாக மனைவி உள்பட நான்கு பேரை சங்ககிரி போலீசார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம், அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னப்பன் மகன் தனபால் (44). அவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும் நித்தீஸ்குமார் (18) என்ற மகனும் உள்ளனர். அதனையடுத்து கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு இடையை கடந்த மூன்று ஆண்டுகளாக சரிதா தனபாலை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிக்க | எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்!
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய நிலையில் தனபால் அருகில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகாராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத்தகராறில் தனபால் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயமடைந்த அவர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலின் சடலத்தை கைப்பற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தனபாலின் மனைவி சரிதா (38), சரிதாவின் தந்தை குமராசாமி (68), தாய் ராஜம்மாள் (60), சகோதரர் சரவணன் (44) ஆகிய நான்கு பேரை போலீசார் பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உடல் கூறாய்வு அறிக்கையை அடுத்து இவ்வழக்கில் மேல்விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.