சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, பட்டினம்பாக்கம், துரைபாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
அதேபோல், புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
பரவலான மழையால் ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புவோர் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.