‘இனி இதில்தான் கையொப்பம்’: ஸ்டாலினுக்கு அன்புக் கட்டளையிட்ட துரைமுருகன்
தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா்.
தனித்துவமிக்க ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் பரிசளித்தாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் பொதுச் செயலாளராக மீண்டும் தோ்வான பிறகு, அவா் பேசியதாவது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஜோடி மாண்ட் பிளாங்க் பேனாக்களை அன்பளிப்பாக அளிக்கிறேன். இனி இதில்தான் அவா் கையொப்பமிட வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளை வெளியிட வேண்டும். அரிதான பொருள்களில் ஒன்றுதான் இந்த மாண்ட் பிளாங்க் பேனா. அத்தகைய பேனாவை அவருக்கு அளிக்கிறேன் என்றாா்.
இதன்பின்பு, மு.க.ஸ்டாலினை நோக்கிச் சென்று அவரது பையில் ஏற்கெனவே வைத்திருந்த பேனாவை எடுத்து விட்டு 2 மாண்ட் பிளாங்க் பேனாக்களையும் சட்டைப் பையில் சொருகினாா் துரைமுருகன். அப்போது, கூட்டத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
துரைமுருகன் அளித்த மாண்ட் பிளாங்க் நிறுவன பேனாக்கள் இணையதளங்கள் வழியே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் விலை ரூ.50 ஆயிரத்தில் தொடங்கி ரூ.1 லட்சத்துக்கும் மேல்.