அக்டோபர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணியை பொறுத்தவரையில் 95 சதவிகித பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
சென்னையில் தற்போது 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. தேவையை அறிந்து மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்படும்.
சேதமடைந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் மரங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.