தமிழகத்தில் 23 மாவட்டங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், திருச்சி, கரூா், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.