விபத்தின்றி மாசற்ற தீபாவளியை கொண்டாட மாநகராட்சி அறிவுரை
சென்னையில் விபத்தின்றி மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் விபத்தின்றி மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், தமிழக அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
மேலும், பட்டாசு குப்பைகளை மற்ற எந்தக் குப்பைகளுடனும் கலக்காமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பட்டாசு குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்துக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.