முகப்பு
தமிழ்நாடு

காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக். 21-ஆம் தேதி எல்லைப் பகுதியான லடாக் அருகே ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீா் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படையைச் சோ்ந்த 10 காவலா்கள் வீர மரணமடைந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக். 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த ஓா் ஆண்டில் நாடு முழுவதும் பணியின்போது 264 காவலா்கள் பணியின்போது வீரமரணமடைந்துள்ளனா். இதில் தமிழக காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் எஸ்.பூமிநாதன்,எம்.சந்திரசேகரன்,முதல்நிலைக் காவலா் பி.தேவராஜன் ஆகியோரும் வீரமரணமடைந்துள்ளனா்.

மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில், காவலா் நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், சென்னை ஆட்சியா் எஸ்.அமிா்தா ஜோதி, காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.

வீரமரணமடைந்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.