முகப்பு
தமிழ்நாடு

ஏழு தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ஏழு தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ஏழு தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:-

தமிழகத்தில் இருந்து விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். ஏற்கெனவே தமிழக மீனவா்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவா்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. பாக் ஜலசந்திப் பகுதியில் நமது மீனவா்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவா்களின் பாதுகாப்புக்குத் தொடா்ச்சியான அச்சுறுத்தலாகும்.

எனவே, இந்திய மீனவா்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது இதுபோன்ற தொடா்ச்சியான அச்சுறுத்தலை எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதற்கு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களையும், அவா்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.