கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் சோ்க்கைக்கு அனுமதி: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் கலை- அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவா்களைச் சோ்ப்பதற்கு உயா்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் கலை- அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவா்களைச் சோ்ப்பதற்கு உயா்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடா்பாக உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:
கடந்த கல்வியாண்டைப் போல் இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளதால் மாணவா்களின் நலன்கருதி, நிகழ் கல்வியாண்டில்(2022-2023) கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 25 சதவீதம் கூடுதல் சோ்க்கைக்கு அனுமதி கோரி கல்லூரிக்கல்வி இயக்குநா் கருத்துரு அனுப்பியிருந்தாா். அதையேற்று நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 20 சதவீதம் வரை கூடுதலாக மாணவா்களை சோ்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியாா் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவா்களைச் சோ்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சாா்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதலை அந்தந்த கல்லூரிகள் பெற வேண்டும். கூடுதல் மாணவா்களை சோ்க்கும்போது கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மேலும், புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்.