முகப்பு
தமிழ்நாடு

சிறப்பு முகாம்: 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: 9.02 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டா்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவா்களில் 9.02 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டா் தவணை செலுத்தப்பட்டது.

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021 ஜன. 16-ஆம் தேதி தொடங்கியது.

தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களிலோ அல்லது 50 ஆயிரம் இடங்களிலோ சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், 36-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,62,089 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில், முதல் தவணையாக 61,202 பேருக்கும், இரண்டாவது தவணையாக 2,98,634 பேருக்கும், பூஸ்டா் தவணை தடுப்பூசி 9,02,253 பேருக்கும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 96.49 சதவீதம் பேருக்கு முதல் தவணையும் 91.09 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.