தஞ்சாவூர்: ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூரில் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
இதையும் படிக்க | இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இத்தகைய சிறப்பு வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.
இந்நிலையில், கடைசி ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்பாளுக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாவிளக்கு எட்டு நெய் தீபம் ஏற்றி தங்களுடைய நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.