ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி சென்னையைச் சோ்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 9 இடங்களைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ். நிா்வாகிகள் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘அணிவகுப்பு ஊரவலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை. ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆா் எஸ்எஸ் இயக்கத்தின் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22-ஆம் தேதி முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.