சேலம்: திருவள்ளூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க விதிகளுக்கு முரணாக சான்றிதழ்கள் வழங்கியதாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை எதிரொலியாக சேலத்தில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பொறுப்பு வகித்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியானது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் மூன்று பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ஸ்ரீரங்கபாளையம் வித்யாலயா சாலையில் உள்ள மருத்துவர் மனோகர் என்பவரது வீட்டிலும், அஸ்தம்பட்டி பழனியப்பா நகர் பகுதியில் உள்ள மருத்துவர் சுஜாதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் பல்வேறு மருத்துவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.