முகப்பு
தமிழ்நாடு

கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை மீது தாக்குதல்

காவலர்கள் மீது  50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, வாகனத்தை உடைத்து விட்டு  பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான கடல் அட்டையை எடுத்து கொண்டு தப்பியது

Updated On : 13 செப்டம்பர், 2022 at 12:48 PM
கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை மீது தாக்குதல்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

ராமேசுவரம்: மண்டபம் அருகே கடல் அட்டை கடத்தலை தடுத்த சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது  50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, வாகனத்தை உடைத்து விட்டு  பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான கடல் அட்டையை எடுத்து கொண்டு, கைது செய்து வைத்திருந்த மூன்று பேரையும் மீட்டுச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடல் பகுதி வழியாக போதைப்பொருட்கள் கடத்தல் நடைபெற உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து, காளிதாஸ் தலைமையில் 5 காவல்துறையினர் மாற்றுவாகனத்தில் மண்டபம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை இன்று அதிகாலையில் நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தில் வந்தவர்கள் நிறுத்துவது போல வந்து காவல்துறை என அறிந்தவுடன் அவர்கள் மீது மோதி விட்டு விரைந்து சென்றனர். காவல்துறையினர் விரட்டிச்சென்று வேதாளை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

இதனைதொடர்ந்து, வாகனத்தில் சோதனையிட்ட போது 2 கோடி மதிப்பிலான 45 மூடைகளில் 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை இருப்பது தெரியவந்தது. இந்த நேரத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். இதில், மூன்று பேரை பிடித்து மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன்  அந்த காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் கடத்திவிட்டு, வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து மூன்று பேர் 2 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை எடுத்துச் சென்றனர்.

மேலும் காவல்துறையினர் தடுக்க முயன்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியாத அளவிற்கு செல்போன்களை பறிக்க முயன்றனர்.

இதனைதொடர்ந்து, காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு பெண்களை வரவழைத்து காவல்துறையினரை சூழ்ந்து கொண்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. காவல்துறையினர் பெண்களை மீறி அவர்களை தடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தொடர்ந்து வேதாளை பகுதியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் இது இரண்டாவது முறை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதால் இரவு நேரத்தில் கடத்தலை தடுக்கும் பணியில் உள்ள காவல்துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் புலம்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, வேதாளையில் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்க முடியாத நிலையில் தமிழக போலீசார் நிலை உள்ளது. இதனால் மத்திய பாதுகாப்புப் படையினரை இங்கு பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.