சிலைகளை மீட்க வெளிநாடு செல்ல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு: அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் வகையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் வகையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு செய்துள்ளது.
தமிழக கோயில்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபை, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பழமையான மற்றும் அரிய பொருள்களின் ஏல மையம், அருங்காட்சியங்கள் ஆகியவற்றை ரகசியமாக கண்காணிக்கிறது.
இதன் விளைவாக கடந்த 6 மாதங்களில் அமெரிக்க,ஆஸ்திரேலியா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அருங்காட்சியங்கள், ஏல மையங்கள் ஆகியவற்றில் சுமாா் 60 சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் தமிழகத்தில் கடந்த 1990 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் திருடப்பட்டு, கடத்தப்பட்டவை என்பதையும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் உறுதி செய்தனா்.
இந்த சிலைகளை மீட்பது குறித்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபுவிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெய்ந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆலோசனை செய்தனா். இந்த ஆலோசனையில், வெளிநாடுகளில் அருங்காட்சியங்களிலும், ஏல மையங்களிலும் உள்ள தமிழக கோயில் சிலைகளை மீட்பதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தனிப்படையினா் வெளிநாடுகளுக்கு செல்ல தமிழக அரசின் அனுமதியை காவல்துறை கோரியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படையினா், சிலைகளை மீட்க வெளிநாடுகளுக்கு செல்வாா்கள் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.