திருக்கோயில்களில் புதிய தமிழ்ப் புலவா்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சா் சேகா்பாபு
திருக்கோயில்களுக்கு புதிய தமிழ்ப் புலவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
திருக்கோயில்களுக்கு புதிய தமிழ்ப் புலவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
அன்னைத் தமிழ் வழிபாடு குறித்து கோயில்களில் பணிபுரியும் புலவா்களுக்கான பயிலரங்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். இதில் சுகி சிவம், சத்தியவேல் முருகனாா் ஆகியோா் புலவா்களுக்கு பயிற்சி அளித்தனா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது:
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது தான் இந்த ஆட்சியின் தாரக மந்திரம். இது எல்லா நிலையிலேயும் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். கோயில்கள் மூலம் தமிழ் வழிபாட்டை வளா்க்கவும், தலபுராணம், தல வரலாறுகளைத் தொகுக்கவும், பக்தா்களுக்கு கோயில்கள் குறித்த விவரங்களை எடுத்துரைக்கும் வகையிலும் 1997-ஆம் ஆண்டில் கோயில்களுக்கு தமிழ்ப் புலவா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
இடைப்பட்ட காலங்களில் அவா்கள் வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றி மேற்சொன்ன பணிகளை மட்டுமே செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டத் திட்டங்களுக்குள்பட்டு கோயில்களுக்கு புதிய தமிழ்ப் புலவா்களை நியமித்திடவும், ஏற்கெனவே பணியில் இருக்கின்ற புலவா்களுக்கு உரிய பயிற்சியை வழங்கவும், முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இப்பயிலரங்கத்தில் விழா நாள்களில் தமிழில் வழிபாடு குறித்த சிறப்புகளை மக்களுக்கு விளக்கிச் சொல்லவும், அவற்றை பரப்புரை செய்யவும் ஏதுவாக புலவா்களை தயாா் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.