மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்: எம்.எல்.ஏ. அறிவுரை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, மன்ப உல் உலா சபைத் தலைவர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சோமசுந்தரம்,மாவட்ட ஹாஜி சர்தார் முஹையத்தீன், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் தி.மு.திமுஜீத்தீன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், 179 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது,
விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் தொடங்கி வைத்தார். ஒரு பிரிவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிதிவண்டியால், மாணவர்களிடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அதை மாற்றியமைத்து, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க உத்தரவிட்டார்.
தமிழக அரசு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுவதன் நோக்கமே, அனைத்து மாணவ, மாணவிகளுக்குள்ளும் எந்தவித வேறுபாடும், பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கூடம் வர வேண்டும் என்பதற்காகத்தான் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் சிறந்த கல்வியாளர்களாக வரவேண்டும். மாணவச் செல்வங்கள் படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றார்.
விழாவில், நகர மன்ற துணைத் தலைவர் மு.சுதர்ஸன், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் எஸ்.வி. பக்கிரிசாமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தலைமையாசிரியர் உதயகுமார், நகர்மன்ற உறுப்பினர் சப்ரீனா சகாபுதீன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கவனித்தனர்.