முகப்பு
தமிழ்நாடு

வாழப்பாடியில் பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றம்

வாழப்பாடியில் பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
வாழப்பாடியில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தில் ஒரு காட்சி.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை வெள்ளி விழாவையொட்டி, சுற்றுப்புற கிராமங்களில் இயங்கும் நாடக மன்றங்களுடன் இணைந்து, மறைந்த  எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன்  வரலாற்று நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரமாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை, ஒரு நாள் மேடை நாடகமாக அரங்கேற்றும் செய்யும் வகையில், வாழப்பாடி அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கவிஞர்.மா.கணேசன், 184 பக்கங்கள் கொண்ட நாடக நூலாக எழுதியுள்ளார். இந்நுாலை, வாழப்பாடி விவேகா பதிப்பகம்   வெளியிட்டுள்ளது. 

வாழப்பாடி இலக்கியப் பேரவையின் வெள்ளிவிழாவை யொட்டி, பொன்னியின் செல்வன் நாடக நுால் வெளியீட்டு விழா மற்றும், நாடக அரங்கேற்றம்,  ஞாயிற்றுக்கிழமை இரவு, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகிலுள்ள வாழப்பாடியார்  மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வாழப்பாடி பேரூராட்சி  தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இலக்கியப் பேரவை செயலர் ஆசிரியர் சிவ.எம்கோ வரவேற்றார். ஆசிரியை புஷ்பா, அஞ்சலம், உமா செந்தில் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமசாமி, கவிஞர் பெரியார்மன்னன் ஆகியோர்  நுாலை வெளியிட,  தொழிலதிபர்கள் குறிச்சி சண்முகம், கல்லேரிப்பட்டி கே.செல்வராஜ், அரிமா தேவராஜன், பெரிய கிருஷ்ணாபுரம் மலர் (எ) பழனிமுத்து, கோகுலம் பள்ளி முதல்வர் தமிழரசி, பி.சி.செல்வம், ஆசிரியர் கோ.முருகேசன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.கவிஞர். மா.கணேசன் ஏற்புரை வழங்கினார். 

நாடகத்தை காண குவிந்திருந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு பகுதி.

இதனைத்தொடர்ந்து, நாடகக் காவலர், ஆசிரியர்  மத்தூர் அன்புத்தம்பி அவர்களின் படத்திறப்பு அஞ்சலி நிகழ்ச்சியும், பொன்னியின் செல்வன் நாடக அரங்கேற்றமும் நடைபெற்றது. 

இந்த வரலாற்று நாடகத்தை, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாடக ரசிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள்  கண்டு களித்தனர்.  

நூற்றுக்கணக்கானோர் யூடியூப் சேனல் நேரலையில் கண்டு ரசித்தனர். பரமத்தி வேலூர் தேவன் நிறுவனத்தின், ஹை டெக் டிஜிட்டல் திரை சீன்செட்டிங் மற்றும் நடிகர்கள், நடிகைகளின் நடிப்பும் மிக நேர்த்தியாக அமைந்திருந்ததாகவும், நடிகர் நடிகைகள் தத்ரூபமாக நடித்து நாடகத்தை அரங்கேற்றம் செய்ததாகவும்,  ரசிகர்கள் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர். நிறைவாக, ஆசிரியர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.