முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பலி

முக்கூடல் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவி  பலியானார். மற்றொரு மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
இரு சக்கர வாகனத்தை மோதிய லாரி
பகிர்:

திருநெல்வேலி: முக்கூடல் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவி  பலியானார். மற்றொரு மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள கீழபாப்பாக்குடி பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மகள்கள் சங்கீதா (வயது 19), வைஷ்ணவி (19). சகோதரிகளான இவர்கள் இருவரும் நெல்லை பழைய பேட்டையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றுவிட்டு அவர்களது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

முக்கூடல், ஆலங்குளம் சாலையிலுள்ள தனியார் மில் அருகே வந்த போது, எதிரே மில்லுக்கு வந்த லாரி, வலதுபுறமாக திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியுள்ளது.

இதில், லாரியின் பின்புற டயர் ஏறி மாணவி சங்கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே, அவரது தங்கை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வைஷ்ணவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து முக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,

அதன்பேரில் விரைந்து வந்த முக்கூடல் போலீசார் சங்கீதா உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த வைஷ்ணவியையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து விபத்து தொடர்பாக,  முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் நவநீத கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →