முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் இன்று காலை 11 மணியளவில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என 8 பேர் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்துகிறது.

சசிகலாவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை விடியோவில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது.

அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இச்சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.

5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

சமீபத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளா் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.