மாண்டஸ் புயல்: சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா? - தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னையில் புறநகர் ரயில்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. முதலில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(டிச.9) இரவு அரசுப் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறை கூறியிருந்தது.
பின்னர், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது இசிஆர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல சென்னையில் புறநகர் ரயில்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். பாதுகாப்பாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்னல் கோளாறு ஏற்பட்டால் சூழலைப் பொருத்து முடிவு செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது நேரம் மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளது. புயல் மற்றும் கனமழை நேரத்தில் மணிக்கு 10 கிமீ முதல் 15 கிமீ என ரயிலின் வேகம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.