முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரத்திற்கு இலவசப் பேருந்துகள் இயக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி, சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி, சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவசமாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.  

இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதுபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளன. 

இதையொட்டி, வருகிற திங்கள்கிழமை(ஜூலை 25) முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 

மத்திய கைலாஷில் இருந்து ராஜிவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பை அடைந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும். சென்னை -மாமல்லபுரம் இருமார்க்கமாகவும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும் எஸ்ஆர்பி டூல்ஸ், பிடிசி குவாட்ரஸ், தக்ஷிணசித்ரா, முட்டுக்காடு, திருவிடந்தை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அதிகமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →