முகப்பு
தமிழ்நாடு

தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு:  நகர்மன்ற உறுப்பினர் சாலை மறியல்

தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து வந்தவாசி 2-ஆவது வார்டு விசிக நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் சாலை மறியலில் ஈடுபட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்  மறியலில் ஈடுபட்ட 2-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
பகிர்:

வந்தவாசி: தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து வந்தவாசி 2-ஆவது வார்டு விசிக நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டார். 

வந்தவாசி நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூடத்தில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. 

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால் தலைமை வகித்தார். ஆணையர் முஸ்தபா, துணைத்தலைவர் க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    

கூட்டத்தில் 2-ஆவது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் பேசியதாவது: 
நகராட்சியில் பணிபுரியும் தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தினமும் ரூ.10 ஆயிரம் வரை முறைகேடு செய்யப்படுகிறது என்று புகார் தெரிவித்து பேசினார். இதற்கு தலைவர் எச்.ஜலால் மறுப்பு தெரிவித்து பேசினார். 

இதைத் தொடர்ந்து, முறைகேட்டை கண்டித்து வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் விசிக மாநில துணைச் செயலர் மூவேந்தன், நகர இணைச் செயலர் ம.விஜய் ஆகியோரும் மறியலில் பங்கேற்றனர். 

அப்போது தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதிய முறைகேட்டைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் வந்தவாசி தெற்கு போலீஸார் சமரசம் செய்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.