நவ.11, 12-ல் சென்னையில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 09 - 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக,
Advertisement
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்பட நாளை 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 11-ல் தஞ்சாவூர், திருவாரூ, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.12-ல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்பட 13 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.