முகப்பு
தமிழ்நாடு

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து சாவு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 26 நவம்பர், 2022 at 1:02 PM
தங்கவேலு
பகிர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள டி.என். பட்டி பேரூராட்சி தாழையூரைச் சேர்ந்தவர் தங்கவேலு(85). நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர். திமுக மீது தீவிர பற்றுக் கொண்டவர். 

இன்று காலை தாழையூர் திமுக அலுவலகம் முன்பு ஒரு தாளில் "குடியரசு தலைவர் அவர்களே, இந்தியை திணிக்க தயவுசெய்து அனுமதி வழங்காதீர்கள், மோடி அரசே, மத்திய அரசே, இந்தியை திணிக்காதே, இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்தி கோணமான எழுத்து; கோமாளி எழுத்து, மாணவ, மாணவிகள் வாயில் நுழையாது, வேலைவாய்ப்பைப் பாதிக்கும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" -எம்.வி. தங்கவேலு, தாழையூர், பி.என். பட்டி என்று எழுதி வைத்துவிட்டு, தன் மீது பெட்ரோல் ஊற்றி தானே தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றி எரிந்தபோது 'இந்தி ஒழிக; தமிழ் வாழ்க' என்று கோஷமிட்டார்.  சற்று நேரத்தில் எரிந்து கரிக்கட்டையாக கீழே சாய்ந்தார்.

Advertisement

தகவலறிந்த கருமலை கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பி.என். பட்டி பேரூராட்சி தலைவர் பொண்ணு வேலு, டி.என். பட்டி திமுக பேரூர் செயலாளர் குமார், வீரக்கல் புதூர் பேரூர் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.