விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு: காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம்
விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்கால்: விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் என்கிற மாணவர் விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். அதே வகுப்பு மாணவி ஒருவரின் தாயார் சகாயாராணி விக்டோரியாதான் அந்த குளிர்பானத்தை அவருக்கு பள்ளி காவலாளி மூலம் வழங்கியது தெரிய வந்து அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்து புதுச்சேரி சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் அரசு பொது மருத்துவமனை உரிய சிகிச்சை தராததால்தான் மாணவர் உயிரிழக்க நேரிட்டது என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பொது மருத்துவமனையை நவீன நிலைக்கேற்ப தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழு என்கிற அமைப்பு வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விஷம் கலந்து கொடுத்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர் குடும்பத்திற்கு புதுவை அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அதே நாளில் அடைப்புப் போராட்டத்திற்கு இந்து முன்னணியும் அழைப்பு விடுத்தது.
தினமும் காலை 8 மணி முதல் காரைக்காலில் பரவலாக கடைகள் திறக்கப்படும் நிலையில், காரைக்கால் நகரப் பகுதியிலும் பிற இடங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்குகின்றன. பள்ளிகளுக்கு மாணவர்களை கொண்டு செல்லக்கூடிய தனியார் வேன்கள் பலவும் நிறுத்தப்பட்டதால் பெற்றோர்கள் இருசக்கர வாகனம், கார்களில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டோ இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் வழக்கம்போல இயங்குகின்றன. காரைக்கால் மாவட்ட போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.