அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை திங்கள்கிழமை(செப்.12) விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடுஅதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை திங்கள்கிழமை(செப்.12) விசாரணைக்கு வருகிறது.
சென்னை: அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை திங்கள்கிழமை(செப்.12) விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர்காயம் அடைந்த நிலையில் அதிமுக அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருள்களும் கொள்ளை போனது.
இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது.
நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த மாதம் 4 ஆம் தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்குரைஞர்கள் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த் துறையினர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், 3 வார இடைவெளிக்குபிறகு அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை திங்கள்கிழமை(செப்.12) நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனு விசாரணை வரும் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.